தமிழக செய்திகள்

ரேஷன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர்.

சென்னை

ரேஷன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.

வெள்ளை நிற அரிசி

இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.

தொடர்ந்து சபாநாயகர் அனுமதியுடன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூட சுகர் குறையும் என்பதற்காக இதனையே சாப்பிடுகிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு பேசும்போது, 30 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த உணவு துறையை பார்த்துள்ளேன். அப்போது அரிசி கிடைப்பது கஷ்டம். கருப்பான அரிசியே கிடைக்கும் என்றார்.

சர்க்கரை குறையும்

அமைச்சராக சக்கரபாணி இருந்தபோது, நெல்லை நனையாமல் கொண்டு சென்றவர் என்றார். அதனால் ரேஷன் அரிசி கால்நடைகளுக்கு அல்ல. எல்லா மக்களும் சாப்பிடுகின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறையும் என்பதே உண்மை என்றார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர்

இதன்பின்னர், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கே.என். நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனால், அவற்றிலேயே அவர் நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால், பரம ஏழையாக ரேஷன் கடையில்தான் அரிசி வாங்குகிறேன் என அவர் கூறி இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களுடனான பலகட்ட ஆலோசனைக்கு பின்னர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

ரேஷன் அரிசி

நான் சிறு வயதில் இருக்கும்போது, ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம். அரிசியின் பெரிய அளவில் இருக்கும். பெரும்பாலும் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடுவதில்லை என்றார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அவர், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மையையும், தற்போதுள்ள கால கட்ட நிலைமையை நாங்கள் கூறுகிறோம். அதனால், விவசாயிகள் எங்களிடம், பயிர்களை மாற்ற வேண்டுமென்றால், சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுங்கள் என்றனர்.

இதனால் முதல்-அமைச்சர், மற்ற ஆட்சியை விட்டு விடுவோம். நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க கூடிய அரிசியை சன்ன ரக அரிசியாக கொடுப்போம். அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர்.

அரிசி கடத்தல்

அதற்காகவே பொது ரக நெல்லுக்கு பதிலாக இனி, சன்ன ரக நெல்லை பயிரிட வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், அவற்றை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் அதிகளவில் கொடுக்க முடியும் என்றார்.

90 சதவீதம், ரேஷன் அரிசியை வாங்கி யாரும் சாப்பிடுவதில்லை. இட்லி மாவுக்கு பயன்படுத்தி கொண்டிருந்தனர். ஆந்திராவுக்கு, கர்நாடகாவுக்கு கடத்தப்பட்டது. அது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சன்ன ரக நெல்லை அதிகம் கொள்முதல் செய்து, பாதுகாப்பாக வைப்பதற்கான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

இது சர்வேயின் அறிக்கை. இதனை மாற்றுவதற்காக தான் சன்ன ரக நெல்லுக்கு அதிக ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார் என்றார்.