சென்னை,
தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தவெக அரசு உடனடியாக நிலங்களை வழங்கிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் திண்டிவனம்-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புத்தூர், மொரப்பூர்-தர்மபுரி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை ஆகிய 5 முக்கிய ரெயில்வே திட்டங்கள், மாநில அரசு நிலம் தராததால் முடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த ரெயில்வே திட்டங்களின் தேவையில் வெறும் 26% (1,178 ஹெக்டேர்) நிலத்தை மட்டுமே தமிழக அரசு இதுவரை வழங்கியுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கு முன் மாநிலத்தை ஆண்ட திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தைத் தற்போதைய தவெக அரசும் தொடர்வதால், தமிழக மக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவைகள் நிறைவேற்றப்படாமல், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் கடுமையாக முடங்கியுள்ளது.
எனவே, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தவெக அரசு உடனடியாக முடுக்கிவிட வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, தென்னக ரெயில்வேயுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.