தமிழக செய்திகள்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம்: சோனியா காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுடன், மு.க.ஸ்டாலின் பேச்சு

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் சோனியா காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தினார்.

சென்னை,

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம். மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என மூன்று தரப்பு குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்கவேண்டும்.

மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பினையடுத்து, அதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யு மான மனோஜ் ஜா, ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான கே.சந்திரசேகர் ராவ், சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரிடமும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கீழ்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன்.

* உடனடியாக, கமிட்டி கூட்டத்தை கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது.

* அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது.

* மாநில இடஒதுக்கீட்டு சட்டங்களை பாதுகாப்பது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.