தொண்டி,
திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராசு. இவருக்கும் உறவினர் சித்திரவேலு (வயது 74) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சித்திரவேலு, ராசுவின் வீட்டிற்கு தீ வைத்தார். இதில் ராசுவின் தாயாரான 95 வயது மூதாட்டி பாப்பு அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ராசுவும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது தொடர்பாக திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திரவேலுவை தேடி வந்தனர். இந்நிலையில் சித்திரவேலு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். விசாரணை செய்த நீதிபதி உத்தரவின் பேரில் சித்திரவேலுவை அறந்தாங்கி போலீசார் சிறையில் அடைத்தனர். தகவல் அறிந்த திருவாடானை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ள சித்திரவேலுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.