சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆக்சிஜன் அளவு 35 சதவீதம் என்று மிகவும் குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிர் காக்கும் கருவி மூலம் ஆக்சிஜன் தொடர்ச்சியாக அவருக்கு செலுத்தப்பட்டு, விலையுயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனையில் உள்நோயாளியாக 60 நாட்கள் (2 மாதங்கள்) தங்கியிருந்து சிறப்பு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நுரையீரல் பாதிப்போடு அனுமதிக்கப்பட்டு, அதிக நாட்கள் உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்த நோயாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி தொழிலாளி சாலமனை மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, டாக்டர்கள் சுஜாதா, ரஞ்சனி, பத்மநாபன், ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
மேற்கண்ட தகவல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.