கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் - டிடிவி தினகரன்

மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.

தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT