சென்னை,
நாடு முழுவதும் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தது போல, தமிழ்நாட்டிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் சரிந்துள்ளது.
'நீட்' மறு தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. எப்போதும் தேர்வு முடிவை வெளியிடும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வு எழுதியவர்களின் புள்ளிவிவரங்களை தெளிவாக குறிப்பிட்டு வெளியிடும்.
ஆனால் இந்த முறை அப்படி தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையையும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையையும் சுமார் என்ற அடிப்படையிலேயே தெரிவித்திருந்தது.
அவ்வாறு நடப்பாண்டில் நீட் மறுதேர்வை எழுதிய சுமார் 20 லட்சம் பேரில் 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து நீட் தேர்வை எழுதக் கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து இருக்கிறது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டிலும் 20 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளின் தேர்ச்சி எண்ணிக்கையுடன் பார்க்கும் போது, நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தது போல, தமிழ்நாட்டிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 601 பேர் தேர்வு எழுதியதில், 61 ஆயிரத்து 306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் சரிந்து இருக்கிறது.
இதற்கான காரணம் என்ன? என்ற ஒரு கேள்வி எழுகிறது. இந்த ஆண்டு நீட் மறுதேர்வு வினாத்தாள் சற்று கடினமாகவும், நீண்டதாகவும் இருந்ததாகவும், தேர்வு குறித்த நிச்சயமற்றதன்மை, தொடர் குழப்பங்கள் மற்றும் குறைந்த காலஅவகாசம் ஆகியவை மாணவர்களின் கவனத்தையும், தயாரிப்பையும் கடுமையாக பாதித்ததாகவும், முதல் தேர்வை நன்றாக எழுதியிருந்த பல மாணவர்கள்கூட, இந்த திடீர் அழுத்தத்தினால் மறுதேர்வை அதே உத்வேகத்துடன் எதிர்கொள்ள முடியாமல் போனதாகவும் கல்வியாளர்கள் மற்றும் நிபு ணர்கள் கூறுகின்றனர்.