தமிழக செய்திகள்

வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை வளர்ச்சியடைந்த தமிழ்நாடு வழியாக செல்கிறது: கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

சுவாமி விவேகானந்தர் இரத்த வங்கி மையத்தின் மனிதநேய சேவையை கவர்னர் பாராட்டினார்.

சென்னை,

தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அவர்கள் இன்று கோயம்புத்தூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் இரத்த வங்கி மையத்தினை பார்வையிட்டார். மேலும் இரத்த வங்கி மையத்தின் வசதிகளை பார்வையிட்டு, இரத்த சேகரிப்பு, பரிசோதனை மற்றும் விநியோக செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிக்கும் இவர்களின் அர்ப்பணிப்பான சேவையை அவர் பாராட்டினார். மேலும், ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான இரத்தத்தை வழங்கி, பல நோயாளிகளுக்கு பெரும் பலன் அளித்து வருவதாக கூறினார்.

சுவாமி விவேகானந்தர் இரத்த வங்கி மையத்தின் மனிதநேய சேவையை கவர்னர் பாராட்டினார், மேலும் உயிர் காக்கும் இத்தகைய முயற்சிகளில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பின்னர் ஆர்ய வைத்ய பார்மசியில் நடைபெற்ற பல்வேறு துறைகளில் செயல்படும் சேவா தன்னார்வலர்களின் கூட்டத்தில் சிறப்புரை வழங்கினார்.

2047-இல் வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் காசநோய் இல்லா பாரதம் நோக்கங்களை அடைய அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கை அடையும் பாதை, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு வழியாக செல்கிறது என கவர்னர் தெரிவித்தார். மேலும் நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் தொடர்ந்த சேவையும், சமூக பங்கேற்பும் அவசியம் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு தெரிவித்தார்.