சென்னை,
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் , திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் அதாவது அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த திட்டம் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல் படுகின்றது என்பது அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் ,மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிய உத்தரவிட்டிருந்தார். கருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த பொது கருத்து கேட்பு கூட்டங்களில் 7 மாவட்டங்களில் 134 கிராமங்களை சார்ந்த 2428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைத்தால், விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடையும் என்றும் எரிவாயு கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்
கெயில் நிறுவனத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால் அந்த பணிகள் முடியும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணி களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும் ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதல் வாழ்வு நிலையம் அமைக்க வேண்டி இருப்பதால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் ஏற்கனவே வாங்கப்பட்ட பொருட்கள் குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் பரிசளித்த அதிமுக அரசு கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இத்திட்டத்திற்கான குழாய்களை தமிழக விவசாய நிலங்கள் பாதிப்பு பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையின் ஓரமாக பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடரும் வகையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான இழப்பினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தது.
இந்த சூழலில் சமீபத்தில் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை கையில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் ,கிராமங்களில் விவசாய விளை நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் , இதை அறிந்த விவசாயிகள் போராட்டத்தினை அந்த பகுதியில் நடத்தியதோடு இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திட்டம் புதிதாக அமைக்கப்படவுள்ள தர்மபுரி ஓசூர் நான்கு வழி சாலையில் சாலை ஓரம் அமைக்கப்பட வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
திட்டத்திற்காக மக்கள் அல்ல மக்களுக்காகவே திட்டம் என்பதன் அடிப்படையில் விளை நிலங்களின் ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழக விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையின் ஓரமாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.