தமிழக செய்திகள்

சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

குப்பை எரிஉலைக்கு பதிலாக கழிவுகளை 4 வகையாக பிரித்து சேகரிக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குப்பை எரிஉலை திட்டம்

சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.

நச்சுத் துகள்கள்

குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, பியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.

மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.

தவெக அரசு

இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60 சதவீதம் வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர் நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.

ஜவுளி பூங்கா

சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.

ஹிட்லர்

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல.

திடக்கழிவு மேலாண்மை விதி

எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT