தமிழக செய்திகள்

‘முந்தைய திராவிட மாடல் அரசு தமிழ் மொழிக்கு முதலிடம் தந்தது’ - கி.வீரமணி

ஆர்.என்.ரவியின் போக்கை அனுமதிக்காமல் மு.க.ஸ்டாலின் உரிமையை நிலைநாட்டினார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியின் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதமயமான 'வந்தே மாதரம் பாட்டுக்கு முதலிடம் தந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

முந்தைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் தமிழ் மொழிக்கு முதலிடம் தந்து, தேசிய பண் சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த முன்னாள் கவர்னர் ஆர்.என்.ரவியின் போக்கை அனுமதிக்காமல் இந்த உரிமையை அன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டினார்.

அதனை அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. இதனை தமிழ்நாட்டு மக்களின் எச்சரிக்கையாக கொண்டு பார்க்க தவறினால், அதன் பாரதூர விளைவுகளை இவ்வளவு விரைவில் ஏற்க வேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.