கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது - தமிழிசை

துறையில் உள்ள முறைகேடுகளை களைவதில் அமைச்சர் நிர்மல்குமார் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரையில் பேட்டி கொடுத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பேட்டியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... திருப்பரங்குன்றத்தில். உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதை ஏதோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை போல உருவகப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொல்கிறாரே.. ஏன் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறாரே அப்படி என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலைமை இருந்ததோ அந்த நிலைமை இருக்கட்டும் என்றால் நீங்கள் எல்லாம் எப்படி வந்தீர்கள் ஏன் வந்தீர்கள்? என்று தமிழக மக்கள் கேட்கலாமா..?

திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது... ஏதோ நீங்கள் எல்லாம் அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள். அதனால் உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் உங்கள் காதில் விழாது... அதுமட்டுமல்ல அமைச்சரின் பேட்டி ஐகோர்ட்டின் தீர்ப்பையும், வழக்கத்தையும் மதித்ததாக தெரியவில்லை... அதுமட்டுமல்ல மக்களுக்கு வேண்டியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கும் பொழுது எல்லா தலைவர்களும் பேட்டி கொடுக்கும் முறையை கையாளுகிறார்கள். ஆனால் அந்த முறையையும் மின்சார அமைச்சர் கொச்சைப்படுத்துகிறார்.

முதலில் பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்பு கேள்வி கேட்டிருக்க வேண்டும்... தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்கே பலர் பத்திரிகை சந்திப்புகளை சந்திக்கிறார் என்று பத்திரிகையாளர்களை மதித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துபவர்களை இவர் கொச்சைப்படுத்துகிறாரா.? இன்றைய தொழில்நுட்ப முறைகளினால் வெற்றியைப் பெற்று விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை அறிக்கைகள் தான் இருந்தது இந்த ஊடகங்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.

ஆக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி சார்ந்த அமைச்சர்கள் யாரும் தங்கள் துறையில் உள்ள பிரச்சனைகளை பார்க்காமல், சரியாக அணுகாமல் தமிழகத்தின் உணர்வு பூர்வமான பிரச்சனைகளை மேம்போக்காக அணுகி பேட்டிகள் கொடுப்பது அவர்களுக்கு தமிழக மக்களின் மீது அக்கறையின்மையே காண்பிக்கிறது... திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுக்கும் எண்ணத்தை விட முதலில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டையும் அந்த துறையில் உள்ள முறைகேடுகளையும் களைவதில் அமைச்சர் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும்.. விளக்கேற்றுவோம், ஒளி வேண்டும் என்கிறார்கள் மக்கள். மின்வெட்டு ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்குவோம் என்கிறார் அமைச்சர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.