கோவை:
கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்றுகோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது.
தனியார் ரெயில்
இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து முதல் பயணத்தை தொடங்க உள்ளது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரெயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரெயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதற்காக போத்தனூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் வசம் கொடுக்கப்படும் ரெயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். குறிப்பாக பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ், மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை, போர்வை, உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
ரெயில் கட்டணம்
இந்த ரெயில் சேவையின் கட்டணமானது ரெயில் கட்டணம், பேக்கேஜ் கட்டணம் என இரண்டு வகையாக உள்ளது.
ரெயில் டிக்கெட்
இதில் பேக்கேஜ் கட்டணத்தில் கோவை முதல் சீரடி சென்று திரும்பும் ரெயில் கட்டணம், சீரடியில் சிறப்பு தரிசனம், 3 பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, சுற்றுலா வழிகாட்டி, பயண இன்சுரன்ஸ் போன்றவை அடங்கும். ஆனால் இதில் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயில் தரிசனம் போன்றவை அடங்காது.
இந்த ரெயில் ஆனது கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர்ம் ஈரோடும் சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரெயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
எம்.பி.க்கள் எதிர்ப்பு
ரெயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தனியார் ரெயில் சேவை கோவையில் இருந்து தொடங்குவது குறிப்பிடத்தக்கது.