தமிழக செய்திகள்

அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க

இன்றைய போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை,

அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தி.மு.க தெருவித்துள்ளது.

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தி அதனை ரீல்ஸாக வெளியிட்ட அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்தும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கழக மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு முழுக்க இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கழக உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆதரவு

பல இடங்களிலும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் தடையை தகர்த்து எழுச்சியாக போராட்டம் நடைபெற்று முடிந்தது. கழகத்தின் சார்பில் நடந்த இன்றைய போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

கைது

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட , நகர, ஒன்றிய , பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகள் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருளை பயன்படுத்திய அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவரணியினர் தெரிவித்தனர்.