சென்னை,
கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்து இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் ஆகமவிதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அரசினால் 06.10.2025 அன்று ஐந்து நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
திருக்கோவில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினரால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இத்திருக்கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்துரு இருந்தால் தெரிவிப்பதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென குழு கருதுகிறது.
ஆகம குழுவினால் பரிசீலினை செய்யப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோவில்கள் இணையதளத்தில் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துறையின் www.hrce.tn.gov.in இதுகுறித்த விவரங்களில் பொதுமக்கள் விடுதல் ஏதும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.