தமிழக செய்திகள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கான தொழில்துறை ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்ட கால செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில்துறை ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல், மின்னணு, தோல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து தொழில்துறை ஆலோசகர் மூலம் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

தொழில் துறையின் உற்பத்தி திறனை உயர்த்துவது, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு, தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்துவது, முதலீடுகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கான தொழில்துறை ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT