தமிழக செய்திகள்

விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் துணிகரம் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அடுத்த பி.கே.வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முந்திரி வியாபாரியான இவர் முந்திரி கொட்டை உடைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக நேற்று விருத்தாசலம் கனரா வங்கிக்கு சென்று, தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, சிட்டா அடங்கல் வாங்குவதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் முதனை கூட்டுறவு வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை கூட்டுறவு வங்கி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை. மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு ரவிச்சந்திரன் கூட்டுறவு வங்கிக்குள் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SCROLL FOR NEXT