தமிழக செய்திகள்

மூட நம்பிக்கைகளுக்கு தவெக அரசு இடம் கொடுக்கக்கூடாது; விசிக சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்து உரையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு உரையாற்றினார். சட்டசபையில் வன்னி அரசு பேசியதாவது,

தவெக அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல் அறிவியலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு தவெக அரசு இடம் கொடுக்கக்கூடாது. கர்நாடகம், மராட்டிய போன்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு தவெக அரசு தொடரும்’ என்றார்.

இதனிடையே, பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை தமிழக அரசின் முதல்-அமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.