சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற அழைப்பையடுத்து, எனது கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு செய்தோம். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் இந்த அமைச்சரவையில் இடம் பெறும் முடிவை எடுத்துள்ளோம். வன்னியரசு, ஜோதிமணி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னியரசின் பெயரை பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளோம்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கொண்டு வர வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்த முதல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 1999ல் மூப்பனாருடன் தேர்தல் அரசியலில் நாங்கள் அடி எடுத்து வைத்த போது முன்வைத்த முழக்கம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதாகும். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்பது அறிமுகமாகிறது.
தவெக விடுத்த அழைப்பையும் கணக்கில் கொண்டு, கட்சியின் நீண்டகால கனவையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பெரும்பாலான நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர். ஆகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.