சென்னை,
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையை பொறுத்தவரையில் இந்த பருவமழை காலத்தில் 77 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் அநேக இடங்களில் தண்ணீர் இருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள்சென்னை முழுவதுமாக சீர் செய்யப்படும்.
ஆற்றிலும் வெள்ளம், ரோட்டிலும் வெள்ளம் என்பது போல எங்கு பார்த்தாலும் வெள்ளமாக கடந்த ஆட்சியில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு இரவில் யாருக்கும் சொல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதால் 174 பேர் உயிரிழந்தனர், ஆனால் தற்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த ஒவ்வொரு பகுதிகளிலும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து கொண்டு வருகிறார். முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பொருட் சேதம், உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.