திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது41). இவரது மனைவி கெளசல்யா(33). இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
குடிபழக்கம் காரணமாக ராஜமாணிக்கம் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பிரச்சனைக்கு காரணமான இந்த குடியை விடும்படி மனைவி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ராஜமாணிக்கம் கேட்பது மாதிரி தெரியவில்லை.
இந்த நிலையில் சம்பவத்து அன்று ஆத்திரம் அடைந்த மனைவி கௌசல்யா அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கணவன் ராஜமாணிக்கத்தின் மீது ஊற்றினார்.
சூடு தாங்க முடியாத ராஜமாணிக்கம் வலியில் தகறினார். இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.