சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி வரை 8 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், முதியோர்கள் உள்பட பலரும் ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்கு மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே பொதுமக்கள் எளிதாக ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக நடை மேம்பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. எனவே பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே அமைக்கப்படும் நடை மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.