கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருடுபோன விவகாரம்: 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு

திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது.

திருப்பத்தூர்,

ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருடுபோன விவகாரத்தில், 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு

திருபத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு

இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் நா.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி வன அலுவலர்கள் 5 பேரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு, வனவர் பி.பரமகுரு ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.