தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வருபவர் துரைமுருகன். இவர் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த 139 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த துரைமுருகனை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் துரைமுருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரைமுருகனை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை தேனிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.