சென்னை,
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டனர் என்ற துயர செய்திகள் எனது வேதனையையும், மன வலியையும் அதிகரிக்கின்றன. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஜெயலலிதாவின் அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தயவுசெய்து தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.