பழனி,
பழனியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முனைப்பில் அரசு உள்ளது. மதுக்கடைகளில் பாட்டில் உடைவதிலும் பிரச்சினை உள்ளது. அதற்கும் ஒரு கடைக்கு 2 பாட்டில்களுக்கான தொகை கொடுக்க தயாராக உள்ளது. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். உண்மையில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை.
பழனியில் பள்ளி, அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். மக்களுக்கு இடையூறு மற்றும் பிரச்சினை உள்ள டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படும். அதன்படி பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையும் இடமாற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கள்ளுக்கடை பற்றி முழு ஆய்வு செய்து வருகிறோம். ஏனெனில் கேரளம்-தமிழக எல்லையில் உள்ள 'ஸ்பிரிட்' பறிமுதல் செய்துள்ளனர். இவை சில கள்ளுக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தகவல் வருகிறது. எனவே தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.