தூத்துக்குடி,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக-பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு அதிமுக கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை, ஊடகங்களும் பத்திரிகைகளும் தவறாக திரித்து போடவேண்டாம். திமுக கூட்டணியில் 23 நாட்களாக கூட்டணி குறித்து பேசி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தான் தொகுதிகளை இறுதி செய்தனர்.
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் 18 நாட்களாக வார்த்தை போர் நிலவி வந்தது. இது குறித்து எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வந்தது. ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விடலாம் என்றெல்லாம் வந்துவிட்டது. கங்கிரஸ் தலைவர்களும், மாநில பொறுப்பாளர்களும் பல்வேறு கருத்துகளை குறிப்பிட்டு வந்தனர். அதற்கு எதிர் கருத்துகளை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் வெளியிட்டு வந்தனர். இது மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் மனவருத்தத்தில் இருந்து வருகிறார்கள். மதிமுகவின் முக்கிய தலைவர் கூட்டணி குறித்து பேசி விட்டு வரும் போது நாங்கள் அழுதுகொண்டே சிரித்து வருகிறோம் என்றார்.
ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை, கூட்டணி கட்சி தலைவர்களை தலைமை கழகத்திற்கு அழைத்து பேசி அன்றைய தினமே தொகுதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு அதற்கு அடுத்த நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டோம். எனவே அதிமுக கூட்டணியில் கடுகளவு கூட பிரச்சினை இல்லை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.