சென்னை,
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளருமான ஜவஹர் அலி அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கான காரணங்கள் குறித்து ஜவஹர் அலி கூறியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை நலப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கூட போட்டியிட வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள். எதற்கு உங்கள் சமூகத்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். மேலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் யாரையும் பூத் ஏஜெண்டாக நியமிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் சமூக நீதிக்காக போராடிய அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை மதவாதிகளிடம் அடகு வைத்ததின் காரணமாக தலித் சமூகத்தை சேர்ந்த திருமாவளவன் தமிழகத்தின் முதல்-அமைச்சராவதை தடுத்து நிறுத்தி உள்ளார். எனவே கட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. விலகுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.