தமிழக செய்திகள்

பெண் போலீசிடம் தி.மு.க.வினர் அத்துமீறல்: "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க இரும்பு மனம் படைத்த இந்த ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.

நெல்லை,

முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிப்ரவரி 23-ந்தேதி 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க இரும்பு மனம் படைத்த இந்த ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. நாங்கள் போராட்டம் அறிவித்தவுடன் கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT