தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் லண்டனுக்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை - பிரகாஷ்ராஜ்

முதல்-அமைச்சர் விஜய் நடிகர் அஜித்தை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“எல்லா ஆட்சிகளிலும் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருந்துள்ளன. த.வெ.க. ஆட்சி அமைத்து சுமார் 120 நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அவர்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர்களின் செயல்பாடுகள் பற்றி கருத்து சொல்லலாம். மக்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நாம் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்.

கொளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றாரா? அல்லது தோற்கடிக்கப்பட்டாரா? எஸ்.ஐ.ஆர். வேலை செய்ததா? என்பதையெல்லாம் நாம் ஆய்வு செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் தோற்றது அதிர்ச்சிதான். மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் தோல்வியடைந்தார். மக்கள் ஏன் இப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

முதல்-அமைச்சர் விஜய் லண்டனுக்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அவர் முதலீடுகளை ஈர்த்து கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். அதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT