சென்னை,
நிர்வாக வசதிக்காக தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும். தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவை தொகுதிகள், சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறு இல்லை.
அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.