மதுரை,
மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் சுவாமி குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.