வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-
சட்டம்- ஒழுங்கு சரியில்லை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 130 நாட்களில் 209 அறிவிப்புகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால், அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் வெறும் 3, 4 திட்டங்களைத்தான் நிறைவேற்றியுள்ளார், மீதமுள்ள அறிவிப்புகள் வெறும் சாதாரண அறிவிப்புகள்.தி.மு.க. ஆட்சியில், தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உச்சத்திற்கு போய் கொண்டிருக்கிறது. இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.தி.மு.க.வை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள், அவ்வாறு வந்ததும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் கைவிட்டு விடுவார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு, மக்களின் எண்ணங்களை புரிந்து அவர்களுக்காக சேவை செய்கிற அரசு.
அரசியல் ஆதாயம்
தி.மு.க.வினர் புதிதாக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராமல் நாங்கள் (அ.தி.மு.க.) ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அவர்கள் கொண்டு வந்ததாக கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுகிற ஒரே அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அப்படிப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறக்கூடிய தேர்தலில் நமது வேட்பாளர்கள் அத்தனை பேரும் வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்.
தி.மு.க.வுக்கு பயம்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. தி.மு.க.வினரை பொறுத்தவரை இந்த தேர்தலில் தில்லுமுல்லு, முறைகேட்டில் ஈடுபடுவார்கள். அதை நாம் முறியடிக்க வேண்டும்.எந்த தேர்தல் வந்தாலும் அதில் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஜனநாயக முறைப்படி வெற்றி பெறுவதுதான் அ.தி.மு.க., ஆனால் தி.மு.க.வினர் அப்படி அல்ல. அவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே, நமது வேட்பாளர்கள் அனைவரும் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.