தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டத்தின்போது தேரில் எழுந்தருளிய குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா திருச்செந்தூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.
இந்த நிலையில் 10-ம் நாளான இன்று காலையில் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்வாக குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் நின்று பெருமானைத் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். தேரோட்ட திருவிழாவையொட்டி போலீசாரின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்ததோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு இருந்தன.