தமிழக செய்திகள்

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு

குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டு உள்ள திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யபட்டு உள்ளது.


சென்னை,

மெரினா கடற்கரையில் கடந்த 21-ந்தேதி நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார்.

மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அவர் கைது செய்யப்பட்டார். டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோரும் கைதானார்கள்.

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 17 வழக்குகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 4 பேரும் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தி மேலும் ஒரு வழக்கில் கைதாகி உள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி. அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது கல்வீசியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல டைசன், இளமாறன் ஆகியோரும் கைதானார்கள்.