திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மோட்டூர் ஊராட்சி தத்தி வட்டம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் ஏழுமலை (வயது 30) என்பவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றதாக 1098 (குழந்தைகள் உதவி மையம்) எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர் மகளிர் ஊர்க்காவல் அலுவலர் கலைச்செல்வி அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதில் சிறுமியுடன் திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து கலைச்செல்வி இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.