மதுரை
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை கோவில் செயல் அலுவலர், கலெக்டர், எஸ்.பி. என தமிழக அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு கூறும் 5 நபர்களை மலையில் உள்ள தீபத்தூணில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மேலும் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார். இது தொடர்பாக 18ம் தேதி (நாளை) அடுத்தகட்ட விசாரணையின்போது நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பூஜை செய்ய 5 நபர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகவும் சில உத்தரவுகளை தனிநீதிபதி பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து கோவில் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நபர்கள் சிலர் தீபத்தூணில் பூஜை செய்யலாம் என்று பிறப்பித்த உத்தரவு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது. மேலும், திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாமே என்று கருத்து தெரிவித்த இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.