தமிழக செய்திகள்

திருவள்ளூர்: லாரி முன்பு பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

திருமுடிவாக்கம் சிட்கோ, மின்வாரிய அலுவலக ரவுண்டானா அருகே லாரி ஒன்று வந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென சாலையில் ஓடிவந்து லாரி முன்பு பாய்ந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் லாரி முன்பு பாய்ந்து வடவாலிபர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் இருந்து ஒரகடம் நோக்கி சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அதை குன்றத்தூரை சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டினார். சரக்குகளை இறக்கிவிட்டு இன்று அதிகாலை மீண்டும் திருமுடிவாக்கம் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வடமாநில வாலிபர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை:

திருமுடிவாக்கம் சிட்கோ, மின்வாரிய அலுவலக ரவுண்டானா அருகே வந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென சாலையில் ஓடிவந்து லாரி முன்பு பாய்ந்தார். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக குரோம்பேட்டை போக்வரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை:

இறந்த வாலிபர் யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் லாரியில் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.