திருவள்ளூர்
திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். 4 பேர் காயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, ராட்சத பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில், ஆலையில் வேலை செய்து வந்த ரவி என்பவர் பலியாகி உள்ளார். அவர் வடமாநில தொழிலாளி என தெரிய வந்துள்ளது. இதுதவிர 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆலையில், பாய்லர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பாய்லர் வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.