தமிழக செய்திகள்

திருவள்ளூர் ராகவேந்திரா மடத்தில் ஐம்பொன் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூரில் ராகவேந்திரா மடத்தில் ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் அருகே குளக்கரை சாலையில் ராகவேந்திரா மடம் உள்ளது. இந்த மடத்தை திருவள்ளூர் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் (வயது 52) என்பவர் நடத்தி வருகிறார். இவர் இந்த மடத்தில் தினந்தோறும் பூஜைகள் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை மடத்தை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உள்ளே சென்று பார்த்தபோது 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலையும், 30 கிலோ வெள்ளி பொருட்கள், 10 பவுன் தங்க நகை, ரூ.51 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ராகவேந்திர மடத்தின் நிர்வாகி ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT