தமிழக செய்திகள்

திருவள்ளூர்: போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் தீக்குளிப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

திருவள்ளூர்,

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காவியா(20) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காவியாவின் தந்தை சுமன்(48), தனது மகள் மற்றும் மருமகன் விஷ்வா இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து காவியா பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்துக்கு நேற்று விசாரணைக்கு சென்ற விஷ்வா, திடீரென தனது கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பலத்த தீக்காயம் அடைந்த விஷ்வாவை உறவினர்கள் முதலுதவி சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT