தமிழக செய்திகள்

திருவாரூர்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் கைதி தப்பியோட்டம் - போலீசார் வலைவீச்சு...!

திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் கைதி தப்பியோடி உள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக பூந்தோட்டம் பகுதியில் சாராயம் விற்றதாக கூறி கஸ்தூரியை பேரளம் போலீசார் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவாரூர் கிளை சிறையில் கஸ்தூரியை அடைத்தனர்.

சிறையில் இருந்த கஸ்தூரிக்கு கடந்த 24-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். அங்கு கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரிக்கு இரண்டு பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பெற்று வந்த கைதி கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு பெண் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதனை அடுத்து தப்பியோடிய பெண் கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.