தமிழக செய்திகள்

தூத்துக்குடி: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் ரவுடி ஒருவர், கையில் அரிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை அரிவாளைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

போலீசாருக்கு அரிவாளுடன் மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி தேரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சசிகுமார் உடன்குடி பஜார் பகுதியில் கையில் அரிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, போலீசாரை அவர் அரிவாளால் மிரட்டியுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை லாவகமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ரவுடி கைது

உடன்குடி, புதுமனைக்கோட்டை விளையைச் சேர்ந்த முத்துராஜ்(21) மற்றும் அவரது கூட்டாளிகளான சச்சின், சிவசுதேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் குலசேகரன்பட்டினம் பகுதியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரைக் கண்டு அரிவாளைக் காட்டி மிரட்டியவாறே 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.

தப்பியோடியவர்களில் முத்துராஜை போலீசார் மடக்கிப் பிடித்த நிலையில், சச்சின் மற்றும் சிவசுதேஷ் ஆகிய 2 பேரும் அரிவாளுடன் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குலசேகரன்பட்டினம் போலீசார், முத்துராஜை கைது செய்து, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.