தூத்துக்குடி,
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தம் பகுதியில் லாரியில் சட்டவிரோத விற்பனைக்காக 2.8 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையின் லாரி நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கஞ்சா வைத்திருந்த ஏரல் மாறமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் பொன்செல்வம் (வயது 22) மற்றும் தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோக்குமார்(28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.