தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பைக் விபத்தில் மேலும் ஒரு வாலிபர் உயிரிழப்பு

ஆழ்வார்திருநகரி பகுதியில் நடந்த பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு வாலிபர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வாலிபர் இன்று உயிரிழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நல்ராஜபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 21), சிவகணேஷ்(19) மற்றும் இசக்கிராஜா(20) ஆகிய 3 நண்பர்களும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆழ்வார்திருநகரி அரசாங்க நகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த குத்துக்கல் மற்றும் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முத்துப்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் காயம் அடைந்த மற்ற 2 பேரையும் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இசக்கிராஜா(20) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மற்றொரு இளைஞரான சிவகணேஷ் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.