தமிழக செய்திகள்

தூத்துக்குடி: தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ.73.66 லட்சம் பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் பறிமுதல் செய்த பின்னர், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களின் பணம் ரூ.62 லட்சத்து 62 ஆயிரத்து 470 விடுவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று வரை பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்:

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்று பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத்தொகை ரூ.73 லட்சத்து 66 ஆயிரத்து 296.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 548.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 425.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 390.

உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ.62 லட்சத்து 62 ஆயிரத்து 470.

தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்காணிப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.