தமிழக செய்திகள்

தூத்துக்குடி: மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனியே வசித்து வந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கவர்னகிரி கிராமம், மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சப்பாணிமுத்து (வயது 50). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் சப்பாணிமுத்து தனியாகவே வாழ்ந்து வந்தார்.

காயமடைந்துள்ளார்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சப்பாணிமுத்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் அவரை பராமரிக்க ஆள் இல்லாததால், தனது வீட்டின் அருகே உள்ள பொட்டக்குளம் குளக்கரையில் சிறிய கொட்டகை அமைத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை:

தொடர் உடல்நலக் குறைவு மற்றும் தனிமை காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த சப்பாணிமுத்து, இன்று காலை தான் தங்கியிருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.