தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே பள்ளி ஆசிரியைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் 47 வயது பெண் ஆசிரியர், தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து இறங்கி பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவரும் தற்போது முதலிபட்டியில் வசித்து வருபவருமான கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 44), அந்த பெண் ஆசிரியரை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் வழியில் அவரை மறித்து ஆபாசமாக பேசுவதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்துவதுமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
வழக்கம் போல் இன்று பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்ற பெண் ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்து முத்துக்கிருஷ்ணன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், முத்துக்கிருஷ்ணனை சூழ்ந்து மடக்கிப் பிடித்து, பின்னர் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்ட எட்டையாபுரம் போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து, அவர்களின் செல்போன் எண்களை கேட்டு வாங்கி, பல பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.