தூத்துக்குடி
தூத்துக்குடியில் கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சின்ன கெங்குராஜ் (வயது 47), குருவலட்சுமியும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சின்ன கெங்குராஜின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
அதுபோல் குருவலட்சுமியும், தனது கணவரை பிரிந்து சென்றார். பின்னர் குருவலட்சுமி, சின்ன கெங்குராஜ் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் சிலர் குருவலட்சுமியை கண்டித்தனர். இதனை தொடர்ந்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனை பிரிந்து மீண்டும் கணவருடன் குருவலட்சுமி சேர்ந்து குடும்பம் நடத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவர், குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில் குருவலட்சுமியின் வீட்டுக்கு சின்ன கெங்குராஜ் சென்றார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அவர் கூறினார். அதற்கு மறுத்த குருவலட்சுமியை அவர் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சின்ன கெங்குராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குருவலட்சுமி பலியானார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.