தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறையைச் சேர்ந்த சுப்பையா(எ) மணி (வயது 45), கூலித் தொழிலாளி. கீழ தட்டப்பாறை கைலாசபுரம் பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சுப்பையா, சக்தி, அய்யனடைப்பைச் சேர்ந்த முனியசாமி ஆகிய 3 பேரும் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரி தயாரிக்க எரியும் நெருப்பில் தண்ணீர் ஊற்றுவதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சுப்பையா தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றிற்குள் தவறி விழுந்தார். அவர் கிணற்றில் விழுந்ததை அடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை.
தண்ணீரில் மூழ்கிய சுப்பையா கிணற்றிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.